பனிதுளியின் உறக்கத்தை
கலைக்க மாலைநேர நிலவு
நெடுஞ் சாலையில் நடந்து வருகிறது
நீண்ட நாட்களுக்கு பிறகு
குளிரை பிரிந்த இரவும்
கூட்டை பிரிந்த பறவையும்
ஒரே நேர்கோட்டில் சந்திக்கிறது
பார்வையால் மௌனங்களை
மட்டுமே பரிமாறிக் கொள்கிறது
முதல் மழையில் நனைந்த பூக்கள்
தனது காதல் தேனீயிடம்
நலம் விசாரிக்க முடியாமல்
போகாத ஊருக்கு போக
வழி கேட்டு நிற்கிறது
வேற்றுகிரகத்தில் குடியேறிய
மஞ்சள் இளம் வெயிலுக்கு
ஒரு குவளைத் தேனீரை நிழலுடன்
அருகே அமர்ந்து பருக ஆசை
என் பிரபஞ்சத்தின் இன்னும் சில
ஆசைகள் பெருங்கனவுகளாகவே
இருக்கிறது கடைசியாக கேட்க
நிறைவேறாத நெற்றிமுத்தங்கள்போல
கடலூர் ராஜ்குமார்
No comments:
Post a Comment